Thursday, October 20, 2016

ஒரு வெற்றிச் சரித்திரம்💐

" நான் தெற்கிலிருந்து வடக்காக எங்கவீட்டுக்கு ஹோண்டா பைக்ல  வந்துட்டிருந்தேன்.
ஒரு பாதிரியார்  கிழக்கிலிருந்து மேற்காக ஹீரோ கோண்டால வந்திட்டுருந்துருக்காரு … ஒரு நான்கு சாலை சந்திப்பில் பாதிரியர் தனக்கு குறுக்காக சென்று கொண்டிருந்த என் வண்டியில் வேகமாக இடித்து சாலையிலேயே  சிலுவையைப் போட்டு விழுந்தார். "

இருவருக்கும் பெரிதாக அடி ஒன்றும் படவில்லை. பாதிரியாரின் வெள்ளை அங்கி கிழிந்து தொங்கியது. எனது வலது கை முட்டியின் கீழே கொஞ்சம் ஆழமாக என் அங்கம் உறைந்து இரத்தம் கசிந்தது.
அக்கம் பக்கத்தில் இருந்த மனிதாபிமானிகள் ஓடி வந்து இருவரையும் தூக்கிவிட்டார்கள்.!

நீங்கதான்குறுக்க வந்துட்டிங்க,நீங்கதான்  வேகமா வந்து போயிட்டிருந்த வண்டில இடிச்சிட்டீங்க போன்ற வழக்கமான பஞ்சாயத்துகள்  முடிந்து. அவரவர் வண்டியை தள்ளிக்கொண்டு போய் சேருங்கள் என்று ஒரு விஞ்ஞானப் பூர்வமான தீர்ப்பு  பாதசாரிகளால் வழங்கப்பட்டது.!

இதற்கிடையில் பாதிரியர் தனது கைப்பேசியில்  தொடர்புகொண்டு நண்பர்களை காரில் வரவைத்து அதில் ஏறப்போன நேரத்தில் அவரை கூப்பிட்டு  எனது வண்டியின் வலது முன் கால் வைக்கும் கம்பி அப்படியே வளைந்து என் வண்டியை உதைத்து இயக்க முடியாத அளவிற்கு அது  பாதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி இதை பாருங்கள் அய்யா, இதுவே காலில் பட்டிருந்தால் காலே உடைந்து போவதற்கான வாய்ப்புண்டு, ஆகையால் பிற உயிர்களோடு விளையாடாதீர்கள் அய்யா என்று நான் கூறியதும்  , அவர் உடனே எதோ பணம் எதிர்ப்பார்ப்பான் போல என்பதுபோல் நினைத்து என் வண்டியும் முன்பக்கம் முழுவதும்  பாதிக்கப்பட்டுள்ளது  நான் என்ன செய்வது?  என்று கேட்டார்.!
" எதிர்பாராதவிதமாக எதேனும் வாகனமோ, மனிதர்களோ, நாய்களோ குறுக்கே  பாய்ந்தால் உடனே வண்டியை நிறுத்தும் அளவிற்கு  நிதானமாக, கவனமாக வண்டியை ஓட்ட வேண்டும் அய்யா.!  அதுவே உமக்கும் பிற உயிர்களுக்கும் பாதுகாப்பானது "
என்று கூறி  கொஞ்சம் சிரமப்பட்டு வண்டியை உதைத்து இயக்கிக் கிளம்பினேன் …

இன்றோடு ஒன்பது நாள் ஆகிவிட்டது கையில் பட்ட சிராய்ப்பு காயம் இன்னும் ஆறாததோடு  லேசாக பழுப்பும் வருகிறது.!
முதலில் இருந்தே ஊசியை போடுங்க, ஊசியை போடுங்கனு சொல்லிட்டிருந்த என்மனைவி  இப்ப இன்னும் கத்துகிறார்.!
நான் சிறிது மூலிகை எண்ணையை மட்டுமே தடவிவந்தேன், அதோடு தினமும் குளிக்கும் போது மட்டுமல்லாமல் பல நேரங்களிலும் காயத்தில் நீர் வேறுபடுவதால் கொஞ்சம் படுத்துகிறது போல. அதோடு சில நண்பர்கள் வலது கை முட்டிப்பகுதியில் அடிப்பட்டால் கை அதிகமாக அசைந்து கொண்டே இருப்பதால் மெதுவாகதான் ஆறும்.! என்கிறார்கள்.!

இன்றைக்கு தான் முதன்முதலாக  காயத்தை சுடுநீரில் கழுவி சித்தா புண் கழிம்பை போட்டுள்ளேன்.!
இனியாவது வேகமாக காய்கிறதா பார்ப்போம்.!

இதுக்கு ஏம்யா, ஒரு வெற்றிச் சரித்திரம்னு தலைப்பு வெச்சனு கேக்குறியளா?
இப்படி வெற்றி,மகிழ்ச்சி, கொண்டாட்டம், கட்டுக்கட்டா பணம், நடிகையின் நாய்க்குட்டி என்றெல்லாம்  தலைப்பு வெக்கிறதுதான்  தற்கால தமிழர்மரபு.!
கோவிச்சுக்காதியா …

*இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவெனில் வாகன விபத்தில்  இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தொடர்ந்து  முதலிடத்தில் இருக்கிறதாம்.< நம்மை போன்று கணக்கில் வராத சிறு விபத்துகள் எத்தனையோ தெரியவில்லை>
வாகனம் ஓட்டுவதை அனைவரும் ஒரு தியானம் போல் செய்தால் மட்டுமே  ஆர்வக்கோளாறாய் விபத்து ஏற்படுத்தி பலரை அநாதைகளாக  ஆக்கிவரும் தமிழக சாதனையை தடுக்க முடியும்.!
அட, உண்மையில் இது ஒரு தமிழக வெற்றிச்சரித்திரம் தான்.!
இந்த வெற்றியை அனைத்து அதிவேக,
ஆர்வக்கோளாறு ஓட்டுனர்களுக்கும் சமர்ப்பிப்போம்.💐

இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in

Aum Herbals
 Mobile & whatsapp 9629368389

நலம்பெருகட்டும் …

No comments:

Post a Comment