Friday, October 14, 2016

கருணை தேவதை


🌹🌹🌹🌻🌹🌹🌹

" கண்ணுக்கழகு கருத்தான பார்வை
பெண்ணுக்கழகு பூரண அன்பு
மனதிற்கழகு நல்வழி நாடுதல்
மனிதருக்கழகு பல்லுயிர்  பேணுதல் "

பல வடிவங்களில் கருணையோடு விற்றிருக்கும்  கடவுளின் கண்களை நான்  நேரில் கண்டதில்லை.
ஆனால், ஒருநாள் நான்  கடவுளையே நேரில் பார்த்தது போல், ஒரு மருத்துவரை பார்த்தேன் …

எனக்கு அப்பொழுது பத்து பனிரெண்டு வயதிருக்கும்  ஒரு நாள் எதிர்பாராத விதமாக வலது காலில்  விரலுக்கு மேலுள்ள பகுதியில்   ஒரு ஆட்டோவின் முன் சக்கரம் ஏறி இறங்கி கணுக்கால் வரை உள்ள பகுதி அப்படியே சதைந்துவிட்டது …
தெருவில் வீணே திரியும் நாயின் காலில் கல்லெறிந்து குறி தவறவில்லை என்று பல நாள் குதுகுலித்துள்ள நான் அன்றுதான் அடிகொண்ட நாய்கண்ட , வேதனையும் இதுவன்றோ.! என்று
உணர்ந்தேன்.! பிறகு அரசு மருத்துவ மனையில் தொடர்ந்து இரண்டு மாதங்கள் - மூன்று நாளைக்கு  ஒரு தடவை என்று எனது அடிப்பட்ட காலை துடைத்து மருந்திட்டு வந்தும்  சரியான குணம் கிடைக்கவில்லை. படங்காலில் நடுபகுதியில் இரண்டு தேக்கரண்டி எண்ணைய் ஊற்றுமளவு  ஒரு ஆழமான குழி  அதில் சதை வளரவே இல்லை. நிறைய நாட்களாக இதே நிலையில் கால் இருந்ததால் வேறு  தனியார் மருத்துவமனை  சிகிட்சைக்கு போனோம். அப்படியும் அதே அளவில் தான் இருந்தது புண் பூரண குணமாகவில்லை…

அந்த நேரத்தில் தான் ஒரு நண்பரின் வழிகாட்டுதலின் பேரில் திருநெல்வேலி பூரணகலா தியேட்டரில் இருந்து சிந்து பூந்துரை போகும் வழியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு   சென்றோம். <பெயர் நினைவில்லை>  அங்கு ரூபாவதி என்றொரு  மருத்துவரை பார்த்தோம். எங்கள் பழைய மருத்துவமனை  மருந்து சீட்டு எக்ஸ்ரே ரிப்போர்ட் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு  அந்த கருணையாளினி கூறியது இன்றும் நினைவில்  நீங்காமல் உள்ளது.
15  நாளில் சதையை வளர வைத்துவிடலாம்.!
அதற்கு ஒரு மருந்துள்ளது. ஆனால், அந்த மருந்தை  முதலில்  சோதனையாக போட்டு பார்ப்போம்
பையனுக்கு அதில் எந்த ஒவ்வாமை எதுவும் இல்லையெனில் தொடர்ந்து அந்த ஊசியை போட்டு குணப்படுத்திவிடலாம். என்றதோடு உடனே ஒரு ஊசியை உடலில் குத்தி அரைமணி நேரம் காத்திருக்க வைத்துவிட்டு பிறகு எந்த ஒவ்வாமையும்  பையனுக்கு இல்லை என்றுகூறி அந்த மருந்தையே புண்ணிற்கு மேல் ஊசியால்  அடித்துவிட்டு , பிறகு ஒரு ஊசியையையும்  போட்டு  சில மாத்திரைகளையும் கொடுத்துவிட்டார்கள். தினமும் மாலையில் அந்த ஊசியை போட வேண்டும். இப்படி இரண்டு மூன்று நாட்கள் செய்தபோதே
குழியில் வேகமாக சதை வளருவது தெரிந்தது.!
அந்த மருந்து மட்டுமல்ல அந்த மருத்துவரின் கருணையும் என் மனதிற்கு மிகவும் பிடித்துவிட்டது.! நோகாமல் புண்ணை சுத்தம் செய்வது எப்படி என்பதை அவரிடம் தான் கற்க வேண்டும். மற்ற மருத்துவமனைகளில்  பொதுவாக நர்ஸ் தான்  இதுபோன்ற பணியை செய்வார்கள். ஆனால், இங்கு மட்டும் ரூபாவதி டாக்டரே  அனைத்தையும்  செய்வார் அதோடு தினமும் கட்டுப்போட்டதும். கல்கோனா மிட்டாய் வடிவில் ஒரு எள் மிட்டாயும் எனக்கு   தருவார்.!   இப்படியே எளெட்டு நாள் ஆனதும்  ஒருநாள்  பணம் இல்லாததால்  மருத்துவமனைக்கு  வர முடியவில்லை. அடுத்தநாள் இதை தெரிந்துகொண்ட  ரூபாவதி டாக்டர் பையன் இங்கேயே இருக்கட்டும். இன்னும் ஒரு வாரம் தானே நாங்களே பாத்துக்கிறோம்.!
என்று சொன்னதோடு உள் நோயாளிகளுக்கான  வசதி இல்லாத அந்த மருத்துவமனையில் ஒரு ஓரத்தில் இரண்டு பெஞ்சை சேர்த்துப்போட்டு  ஒரு கட்டனையும் கட்டி ஒரு அறை போல வடிவமைத்து  தந்ததோடு  அவர் வீட்டிலிருந்து வரும் உணவைகூட சிலநாள் எனக்கும் என் அம்மாவிற்கும் வழங்குவார்கள்.!
இப்பொழுது கூட என் கண் கசிகிறது … அந்த கருணை அம்மாவை நினைக்கும் போது.! மருத்துவர் என்ற பெயரில் ரூபாய் வசுலிலேயே குறியாக இருக்கும்  சில இன்றைய மருத்துவர்களை பார்க்கும் போது  ரூபாவதி என்ற பெயரை வைத்துக் கொண்டே  கருணை தேவதையாய் வாழ்ந்த  அந்த ஒப்பற்ற மனுசியின் காட்சியே கடவுளின்  இருக்கைக்கான  சாட்சி.! என்ன, புண் என்னாவாயிற்று   என்றுதானே கேட்கிறீர்கள்?
பதினேழாவது நாள் புண்  குழி முழுவதுமே சதை வளர்ந்து அது  பூரணமாகவே ஆறிவிட்டது.!
அவர் பயன் படுத்திய மருந்தின் பெயர் பென்சிலின்.!

இது நடந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகிவிட்டன, இன்றும் எனது கால்களில் அந்த குழிப்புண்ணின் வடு மறையாமல், பூரணமான பெண்மையின் கருணையை  நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறது…!

இன்று அடியேன், இரசாயண  உணவுகளையும் இரசாயண மருந்துகளையும் முற்றிலும் தவிர்த்து ,
இயற்கை வாழ்வியல் முறையிலேயே வாழ்கிறேன்.!
ஆனால், என்னைப் போன்ற எத்தனையோ பேருக்கு அற்புத சுகமளித்த அந்த  பென்சிலின் மருந்தை  அரசு தடை செய்தது ஏன் என்று புரியாமல் தவிக்கிறேன்.!

🍒இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in

Aum Herbals
mobile & whatsapp
9629368389

நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment